சிவபுராணம் - திருவாசகம் பாடல் வரிகள்

உ 

சிவமயம்
 
 
சிவபுராணம் திருவாசகம் பாடல் வரிகள்

 

வெண்பா

தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கி

அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே எல்லை

மருவா நெறியளிக்கும் வாதவூர் எம்கோன்

திருவாசகம் என்னும் தேன்.

 

நமச்சிவாய வாழ்க ! நாதன்தாள் வாழ்க !

இமைப்பொழதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க !

கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க !

ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க !

ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க !

 

வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க !

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க !

புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க !

கரம்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க !

சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க !

 

ஈசனடி போற்றி ! எந்தையடி போற்றி !

தேசன்அடி போற்றி !சிவன் சேவடி போற்றி!

நேயத்தே நின்ற நிமலனடி போற்றி !

மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி !

சீரார் பெருமந்துறை நம்தேவனடி போற்றி !

 

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி !

சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்

அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்

சிந்தை மகிழ சிவபுராணம் தன்னை

முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்

 

கண் நுதலான் தன் கருணை கண் காட்ட வந்தெய்தி

எண்ணுதற்கு எட்டா எழிலார் கழலிறைஞ்சி

வின் நிறைந்து மண் நிறைந்து மிக்காய், விளங்கொளியாய்

எண் இறந்து எல்லை இலாதானே நின்பெருஞ்சீர்

பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்

 

புல்லாகிப் பூடாகிப் புழுவாய் மரமாகிப்

பல்விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய் பேயாய்க் கணங்களாய்

வல்லசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லா    நின்ற இத்தாவர சங்கமத்துள்

 

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான் !

மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்

உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற

மெய்யா !விமலா !விடைப்பாகா !வேதங்கள்

ஐயா !எனவோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே !

 

வெய்யாய் ! தணியாய் !இயமான னாம் விமலா !

பொய் ஆயின எல்லாம் போய்கல வந்தருளி

மெய் ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே !

எஞ்ஞான மில்லாதேன் இன்பப் பெருமானே !

அஞ்ஞானம் தன்னை அகல்விலக்கும் நல்லறிவே

 

ஆக்கம் அளவி இறுதி இல்லாய் ! அனைத்துலகும்

ஆக்குவாய் ! காப்பாய் !அழிப்பாய் ! அருள்தருவாய் !

போக்குவாய் ! என்னைப் புகுவிப்பாய் ! நின்தொழும்பில்

நாற்றத்தின் நேரியாய் ! சேயாய் ! நணியானே !

மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே !

 

கறந்தபால் கன்னலோடு நெய்கலந்தாற் போலச்

சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று

பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் !

நிறங்களோர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த

மறைந்திருந்தாய் எம்பெருமான் ! 

வல்வினையேன் தன்னை 

 

மறைத்திட மூடிய மாய இருளை

அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்

புறந்தோல் போர்த்தெங்கும் புழு அழுக்கு மூடி

மலஞ்ச்சோறும் ஒன்பது வாயிற் குடிலை

மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய

 

விலங்கு மனத்தால் விமலா ! உனக்குக்

கலந்த அன்பாகிக் கசிந்துள் ளுருகும்

நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி

நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்கு

 

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே !

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே !

தேசனே ! தேனார் அமுதே ! சிவபுரனே !

பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே !

நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம்கெடப்

 

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே !

ஆரா அமுதே ! அளவிலாப் பெம்மானே !

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே !

நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே !

இன்பமும் துன்பமும் இல்லானே ! உள்ளானே !

 

அன்பருக்கு அன்பனே ! யாவையுமா யல்லையுமாம்

சோதியனே !துன்னிருளே ! தோன்றாப் பெருமையனே !

ஆதியனே ! அந்தம் நடுவாகி அல்லானே !

ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே !

கூர்த்த மெய்ஞ்ஞானத்தாற் கொண்டுணர்வார் தம்கருத்தின்

 

நோக்கரிய நோக்கே ! நுணுக்கரிய நுண்ணுணர்வே !

போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே !

காக்கும் என் காவலனே ! காண்பரிய பேரொளியே !

ஆற்றின்ப வெள்ளமே ! அத்தா  மிக்காய் நின்ற !

தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்

 

மாற்றாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்

தேற்றனே ! தேற்றத் தெளிவே‌‌‍‌‍‌‍‌‍யென் சிந்தனையுள்

ஊற்றான உண்ணார் அமுதே ! உடையானே !

வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப

ஆற்றேன், எம் ஐயா அரனே ! ஓ ! என்றென்று

 

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்

மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே

கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே !

நுல்லிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே !

தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே !

 

அல்லற் பிறவி அறுப்பானே ! ஓ ! என்று

சொல்லற்கு அரியானை சொல்லித் திருவடிக்கீழ்ச்

சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்

பல்லோரும் ஏத்தப் பணிந்து

திருச்சிற்றம்பலம் ! திருச்சிற்றம்பலம் ! திருச்சிற்றம்பலம் !

திருச்சிற்றம்பலம் ! திருச்சிற்றம்பலம் ! 

மாணிக்கவாசகர்  அருளியது.

 

 


மேலும் படிக்க
 


கருத்துரையிடுக

0 கருத்துகள்