கந்த சஷ்டி கவசம்

 கந்த சஷ்டி கவசம் 


கந்த சஷ்டி கவசம் முன்னுரை 

கந்த சஷ்டி கவசம் என்றால் போருக்குப் போகும் படைவீரன் கவசம் அணிந்து செல்வான். அதாவது எதிரிகள் உடம்பை தாக்கினாலும் உள்ளே அணிந்திருக்கும் கவசம் தடுத்துவிடும்.அதுபோல் இங்கே நம்முடைய முருகப்பெருமானுடைய கந்த சஷ்டி கவசமானது,நம் வாழ்க்கைக்கே கவசமாகக் காக்கிறது.

அதாவது நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாள் வாழ்க்கையில் பல இன்னல்களைச் சந்திக்க வேண்டி இருக்கிறது.உதரணமாகப் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள், வேலைக்குச் செல்லும் முதலாளி சகோதர சகோதரிகள் என்று நாம் அனைவருமே இந்த வாழ்க்கையில் சுழல வேண்டியிருகிறது.

இப்படி சுழலும்போது காலையில் போனால் மாலையில் வீடு வருவதற்குள் பல இன்னல்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.இதனால் ஆண்டவர் நமக்கு இருபத்தி நான்கு மணி நேரம் கொடுத்திருக்கிறார்.இந்த இருப்பத்தி நான்கு மணி நேரத்திற்கு பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் இந்தக் கந்த சஷ்டி கவசம் அணிவதற்கு நேரத்தை ஒதுக்கியோமானால் நம் வாழ்க்கையில் வரும் கஷ்டங்களை முருகன் கவசமாக இருந்து துணை இருப்பார் என்பது உறுதி.

 

ஓம் சரவண பவ 

 விநாயகர் துதி 

அல்லல் போம் வல்வினை போம்

அன்னை வயிற்றில் பிறந்த

தொல்லை போம் போகாத்

துயரம் போம் - நல்ல

குணமதிக மாமருணை

கோபுரத்தின் மேலிருக்கும்

செல்வக் கணபதியைக் 

கைதொழதக்கால்

- அருணகிரிநாதர் அருளியது .

தேவராஜ ஸ்வாமிகள் அருளிய கந்த சஷ்டி கவசம்

கந்த சஷ்டி கவசம்

காப்பு - நேரிசை வெண்பா

துதிப்போர்க்கு வல்வினைபோம்

துன்பம் போம் நெஞ்சிற் 

பதிப்போர்க்குச் செல்வம்

பலித்துக் கதித்தோங்கும்

நிஷ்டையும் கைகூடும்

நிமலர் அருள்

கந்தர் சஷ்டி கவசந்தனை!

குறள் வெண்பா 

அமரர் இடர்தீர அமரம் புரிந்த

குமரனடி நெஞ்சே குறி

கந்த சஷ்டி கவசம்

கவசம்

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்

சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்

பாதம் இரண்டில் பண்மணிச் சதங்கை

கீதம் பாடக், கிண்கிணி யாட

மையல் நடஞ்செய்யும் மயில் வாகனனார்

கையில்வேலால் எனைக் காக்க வென்று வந்து

வரவர, வேலாயுதனார் வருக

வருக வருக மயிலோன் வருக

இந்திரன் முதலா எண்திசை போற்ற

மந்திர வடிவேல் வருக வருக

வாசவன் மருகா வருக வருக

நேசக் குறமகள் நினைவோன் வருக

ஆறுமுகம் படைத்த ஐயா வருக

நீறிடும் வேலவன் சீக்கிரம் வருக

சரவண பவனார் சடுதியில் வருக

ரஹண பவச ரரரர  ரரர

ரிஹண பவச ரி ரி ரி ரி  ரி ரி ரி

விணபவ சரவண வீரா நமோநம

நிபவ சரவண நிறநிறநிறென

வசர ஹணபவ வருக வருக

அசுரர் குடிகெடுத்த ஐயா வருக

என்னை யாளும் இளையோன் கையில்

பன்னிரண்டாயுதம் பாசாங் குசமும்

பரந்தவிழிகள் பன்னிரண் டிலங்க

விரைந்தெனைக் காக்க வேலோன் வருக

ஐயும் கிலியும் அடைவுடன் செளவும்

உய்யொளி செளவும் உயிரை யுங்கிலியும்

கிலியும்செளவும் கிளரொளிஐயும்

நிலைபெற்றென் முன் நித்தமும் ஒளிரும்

சண்முகன்நீயும் தனியொளி யொவ்வும்

குண்டலியாஞ்சிவ குகன் தினம் வருக

ஆறுமுகமும் அணிமுடி யாறும்

நீறிடுநெற்றியும் நீண்ட புருவமும்

பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்

நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

ஈராறு செவியில் இலகு குண்டலமும்

ஆறிரு திண்புயத் தழுகிய மார்பில்

பல்பூஷணமும் பதக்கமும் தரித்து

நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்

முப்புரி நூலும் முத்தணி மார்பும்

செப்பழகுடைய திருவயிறு உந்தியும்

துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்

நவரத்னம் பதித்த நற்சீராவும்

இருதொடையழகும் இணை முழ்ந்தாளும்

திருவடியதனில் சிலம்பொலி முழங்க

செககண செககண செககண செககண

மொகமொக மொகமொக மொகமொக மொகென

நகநக நகநக நகநக நகென

டிகுகுண டிகு டிகு டிகுகுண டிகுண

ரரரர ரரரர ரரரர ரரர

ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு

டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு

விந்து விந்து மயிலோன் விந்து

முந்து முந்து முருகவேல் முந்து

என்றனை யாளும் ஏரகச் செல்வ

மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்(து) உதவும்

லாலா லாலா லாலா வேசமும்

லீலா லீலா லீலா வினேத னென்(று)

உன்திருவடியை உறுதியென் றெண்ணும்

என்தலை வைத்துன் இணையடி காக்க

என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க

பன்னிரு விழியால் பாலனைக் காக்க

அடியேன் வதனம் அழகுவேல் காக்க

பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க

கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க

விதிசெவி இரண்டும் வேலவர் காக்க

நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க

பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க

முப்பத் திருபல் முனைவேல் காக்க

செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க

என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க

மார்பை இரத்தின வடிவேல் காக்க

சேரிள முலைமார் திருவேல் காக்க

வடிவேல் இருதோள் வளம் பெறக் காக்க

பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க

அழகுடன் முதுகை அருள்வேல் காக்க

பழுபதினாறும் பருவேல் காக்க

வெற்றிவேல்,வயிற்றை விளங்குவேல் காக்க

சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க

நாணாங் கயிற்றை நல்வேல் காக்க

ஆண் பெண் குறிகளை அயில்வேல் காக்க

பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க

வட்டக் குதத்தை வவ்வேல் காக்க

பனைத்தொடை இரண்டும் பருவேல் காக்க

கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க

ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க

கைகள் இரண்டும் கருணைவேல் காக்க

முன்கை இரண்டும் முரண்வேல் காக்க

பின்கை இரண்டும் பின்னவள் இருக்க

நாவில் ஸரஸ்வதி நற்துணையாக

நாபிக் கமலம் நல்வேல் காக்க

முப்பால் நாடியை முனைவேல் காக்க

எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க

அடியேன் வதனம் அசைவுள நேரம்

கடுகவே வந்து கனகவேல் காக்க

வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க

அரையிருள் தன்னில் அனையவேல் காக்க

ஏமத்தில் ஜாமத்தில் எதிர்வேல் காக்க

தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க

காக்க காக்க கனகவேல் காக்க

நோக்க நோக்க நொடியில் நோக்க

தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க

பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட 

பில்லி சூனியம் பெரும்பகை அகல

வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள்

அல்லற் படுத்தும் அடங்கா முனியும்

பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்

பெண்களைத் தொடரும் பிரம ராசஷ தரும்

அடியேனைக் கண்டால் அலறிக் கலங்கிட

இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்

எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோடனைவரும்

விட்டாங் காரரும் சண்டாளர்களும்

என்பெயர் சொல்லவும் இடி விழுந்து ஓடிட

ஆனை அடியினில் அரும் பாவைகளும்

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்

நகமும் மயிரும் நீள்முடி மண்டையும்

பாவைகளுடனே பல கலசத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்

ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும்

காசும் பணமும் காவுடன் சோறும்

ஓது மஞ்சனமும் ஒருவழிப் போக்கும்

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட

மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட

கால தூதாள் எனைக் கண்டால் கலங்கிட

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

வாய்விட்டலறி மதிகெட்டோடப்

படியினில் முட்டப் பாசக் கயிற்றால்

கட்டுடனங்கம் கதறிடக் கட்டு

கட்டி உருட்டு கால்கை முறியக்

கட்டுக் கட்டு கதறிடக் கட்டு

முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட

செக்கு செக்கு செதில் செதிலாக

சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு

குத்து குத்து கூர்வடிவேலால்

பற்று பற்று பகலவன் தணலெரி

தணலெரி தணலெரி தணலதுவாக

விடுவிடு வேலை வெருண்டது ஓட

புலியும் நரியும் புன்னரி நாயும்

எலியும் கரடியும் இனித் தொடந்தோடத்

தேளும் பாம்பும் செய்யான் பூரான்

கடிவிட விஷங்கள் கடித்துயரங்கம்

ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க

ஒளிப்பும் சுளுக்கும் ஒரு தலை நோயும்

வாதம் சயித்தியம் வலிப்பு பித்தம்

சூலை சயம் குன்மம் சொக்குச் சிரங்கு

குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி

பக்கப் பிளவைப் படர் தொடை வாழை

கடுவன் படுவன் கைதாள் சிலந்தி

பற்குத்து அரணைப் பரு அரை யாப்பும்

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்

நில்லாதோட நீயெனக்  கருள்வாய்

ஈரேழுலகமும் எனக்குறவாக

ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா

மண்ணாள் அரசரும் மகிழ்ந்துறவாகவும்

உன்னைத் துதிக்க உன் திருநாமம்

சரவண பவனே சைலொளி பவனே

திரிபுர பவனே திகழொளி பவனே

பரிபுர பவனே பவமொழி பவனே

அரிதிரு மருகா அமராவதியைக்

காத்துத்,தேவர்கள் கடுஞ்சிறைவிடுத்தாய்

கந்தா குகனே கதிர் வேலவனே

கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை

இடும்பனை அழித்த,இனிய வேல் முருகா

தணிகாசலனே சங்கரன் புதல்வா

கதிர் காமத்துறை கதிர்வேல் முருகா

பழநிப் பதிவாழ் பால குமரா

ஆவினன் குடிவாழ் அழகிய வேலா

செந்தின்மா மலையுறும் செங்கல்வராய

சமரா புரிவாழ் சண்முகத் தரசே

காரார் குழலாள் கலைமகள் நன்றாய்

என்னா விருக்க யானுனைப்பாட

எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்

பாடினேன் ஆடினேன் பரவசமாக

ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை

நேசமுடன்யான் நெற்றியில் அணியப்

பாசவினைகள் பற்றது நீங்கி

உன்பதம் பெறவே உன்னருளாக

அன்புடன் இரசஷி அன்னமும் சொன்னமும்

மெத்த மெத்தாக வேலா யுதனார்

சித்தி பெற்றடியேன் சிறப்புடன் வாழ்க

வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க

வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க

வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க

வாழ்க வாழ்க மலைக்குறமகளுடன்

வாழ்க வாழ்க வாரணத்துவசம்

வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க

எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்

எத்தனை அடியேன் எத்தனை செயினும்

பெற்றவன் நீகுரு பொறுப்பது உன் கடன்

பெற்றவள் குறமகள் பெற்றவளாமே

பிள்ளையென் றன்பாய்ப் பிரியம் அளித்து

மைந்தன் என் மீதுன் மனமகிழ்ந்தருளித்

தஞ்சமென்றடியார் தழைத்திட அருள்செய்

கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய

பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்

காலையில் மாலையில் கருத்துடன் நாளும்

ஆசாரத்துடன் அங்கம் துலக்கி

நேசமுடன்,ஒரு நினைவது வாகிக்

கந்தர் சஷ்டி கவசம் இதனைச்

சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்

ஒருநாள் முப்பத் தாறு உருக்கொண்டு

ஓதியே ஜெபித்து உகந்து நீறணிய

அஷ்டதிக்குள்ளோர் அடங்கலும் வசமாய்த்

திசைமன்னர் எண்மர் சேர்ந்தங்கருளுவர்

மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர்

நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும்

நவமதன் எனவும் நல்லெழில் பெறுவர்

எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வர்

கந்தர் கை வேலாம் கவசத் தடியை

வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்

விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்

பொல்லாதவரைப் பொடிப் பொடியாக்கும்

நல்லோர் நினைவில் நடனம் புரியும்

சர்வ சத்துரு சங்கா ரத்தடி

அறிந்தெனத் துள்ளம் அஷ்டலக்ஷ்மிகளில்

வீரலக்ஷ்மிக்கு விருந்துணவாகச் 

சூரபத்மாவைத் துணித்த கையதனால்

இருபத் தேழ்வர்க் குவந்தமுதளித்த

குருபரன் பழநிக் குன்றினில் இருக்கும்

சின்னக் குழந்தை சேவடி போற்றி

எனைத்தடுத்தாட்கொள் என்றெனதுள்ளம்

மேவிய வடிவுறும் வேலவா போற்றி

தேவர்கள் சேனா பதியேபோற்றி

குறமகள் மனமகிழ் கோவே போற்றி

திறமிகு திவ்விய தேகா போற்றி

இடும்பாயுதனே இடும்பா போற்றி

கடம்பா போற்றி கந்தா போற்றி

வெட்சி புனையும் வேளே போற்றி

உயர்கிரி கனக சபைக் கோரரசே

மயில் நடமிடுவோய் மலரடி சரணம்

சரணம் சரணம் சரவண பவஓம்

சரணம் சரணம் சண்முகா சரணம் .

வெற்றிவேல்  முருகனே போற்றி  வீரவேல் முருகனே  போற்றி சேவற்கொடியோனே போற்றி வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியா போற்றி

கந்தனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா  


சிவனே சக்தி சக்தியே சிவம்

images courtesy

unplash.com

மேலும் படிக்க 

துக்க நிவாரண அஷ்டகம்



கருத்துரையிடுக

0 கருத்துகள்